Wednesday, 26 November 2014

தேனிலவு (ஹனிமூன்) - பெயர் காரணம்

தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று. ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் தான். அதுவும் வேறு அனுபவங்களைத் தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது. அலுவலக வேலை உடனே போக வேண்டும், அது, இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள். திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன்.

ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் (Honeymonth) தான் இருந்துள்ளது. அது தான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள். ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள். எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.




Sunday, 16 November 2014

பந்தி

கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை “பந்தி” என்கிறார்கள். பந்தி என்பதற்கு வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது. பந்தி பரிமாறுதல் என்பது ஒரு கலை.

எதோ இலையை போட்டோம் உணவுப் பதார்த்தங்களை பரிமாறினோம் என்பதில்லை பந்தியில் பரிமாறுதல் என்பது. சாப்பிடுவோர் மனம் அறிந்து பரிமாறுதல் அவசியம். வந்த விருந்தினர்களை நாம் முறையாக வரவேற்று விருந்தளிக்க வேண்டும். அவர்களது மனம்நிறைய வயிறுநிறையச் சாப்பிட்டுச் செய்ய வேண்டும்.

இதற்கு பந்தி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி' என்பது தமிழில் "பந்தி' ஆனது. “பங்க்தி” என்றால் “சேர்ந்து உண்ணுதல்” என்பது பொருள். மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம்.

Kalyanaveedu.com

Tuesday, 4 November 2014

ஆடி மாதம் புதிதாக திருமணம் ஆன தம்பதியரை பிரித்து வைக்க வேண்டுமா?

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாதமாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத்தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் தம்பதியர் ஒன்றாக இருந்து கற்பமுண்டானால் பிரசவம் சித்திரை மாதம் வரும். கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ 'இந்த மாதம்தான் உகந்தது, இந்த மாதம் சரி கிடையாது’ என எதுவுமே இல்லை.வருடத்தின் எல்லா நாட்களிலும் கர்ப்பம் தரிக்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், 'ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது, சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும். மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். சில சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான், 'சித்திரையில் பிள்ளை வேண்டாம்' என்றனர் நம் முன்னோர்கள். ஆனால், விழிப்பு உணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அந்த மூடநம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியமே இல்லை. சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன'' என்கின்றனர் மருத்துவர்கள்.

Kalyanaveedu.com



Sunday, 2 November 2014

திருமண வேள்வி

பண்டைக் காலப் பழக்க வழக்கங்களில் பல சடங்குகளாக மாறி நிலைபெற்றுள்ளன. சடங்குகளுக்கு வேள்வி செய்தல் என்பது பண்டைக்காலத்திலிருந்தே உள்ளது. அதற்கான சான்றுகள் பல உள்ளன.அதுபோல திருமண சடங்குகளில் வேள்வி செய்வதும் மிகப் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது.

     அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்க்கப்பட்டு திருமண வேள்வி உருவாக்கப்படும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

Kalyanaveedu.com