Friday, 31 October 2014

பதினாறு பேறுகள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


1. நன்மக்கள். 
2. செல்வம்.
3. அழகு.
4.
 நோயின்மை.
5.
 இளமை.
6.
 கல்வி.
7.
 வாழ்நாள்.
8.
 நல்வினை.
9.
 பெருமை.
10.
 துணிவு.
11.
 வலிமை.
12.
 வெற்றி.
13.
 நல்லுணர்வு.
14.
 புகழ்.
15.
 நுகர்ச்சி.
16. 
நல்ல நண்பன்.



Thursday, 30 October 2014

அட்சதை


திருமணத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தின் போது மணமக்கள் மீது அட்சதை போட்டு வாழ்த்துகிறோம்.

நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

அட்சதை என்றால் குத்துப் படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுது படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும்போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).

 
சிலர் முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்றும் சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப்பதினாறு பேறுபெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்

Kalyanaveedu.com




 

Wednesday, 29 October 2014

திருமண முகூர்த்த நேரம் தவறி விட்டதா? இனி கவலையை விடுங்க


நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறந்த நாட்களைத் தேர்ந்தெடுக்க நமது முன்னோர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர். அப்படி கூறப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றி நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர்தான் முகூர்த்தம்.

     திருமணம், கிரகப்பிரவேசம், காதணிவிழா, போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரம் குறித்து அந்த நேரத்தில் தான் நடத்துவது வழக்கம். ஆனால் தவிர்க்க முடியாத சில நேரங்களில் முகூர்த்த நேரம் தவறிப்போவதும் உண்டு. உதாரணத்திற்கு காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்திருப்பார்கள். ஆனால் மணப்பெண்ணோ, மண மகனோ அந்த நேரத்தில் திருமண மேடைக்கு வரமுடியாமல் போய்விடும். முகூர்த்த நேரம் முடிந்து விடும். இதனால் பலரும் குழம்பி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். இதற்கு என்ன செய்வது

     நமது சாஸ்திரத்தில் இதற்கு வழி உள்ளது. அதே திருமண முகூர்த்த நாளில், நண்பகல் 11 மணி 59 நிமிடம், 59 விநாடி முடிந்து மிகச்சரியாக 12 மணிக்கு தாலிகட்டி கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகிறது. இதன்படி சிலர் முகூர்த்த நேரத்தை தவற விட்டு நண்பகல் 12 மணிக்கு தாலி கட்டிக்கொண்டு மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். இந்த நண்பகல் 12 மணி முகூர்த்தத்தை "அபிஜித் முகூர்த்தம் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இனிமேல் முகூர்த்த நேரத்தை தவற விடுபவர்கள் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

kalyanaveedu.com

Tuesday, 28 October 2014

ஆரத்தி



நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை.பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர். 

         தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

     ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
   
      ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.


kalyanaveedu.com