Friday, 18 March 2016

மெஹந்தி

நகை‚ ஆடை அலங்காரத்தைப் போன்று‚தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகு படுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். பொதுவாக இன்றைய இளம் பெண்கள் மெஹந்தி இட்டுக் கொள்வதில் அதீதஆர்வம் காட்டிவருகிறார்கள்.

சமீபகாலமாக திருமண நிச்சயதார்த்தம் போல்‚ மணப்பெண்ணுக்கு மருதாணியிட்டு அழகுபடுத்துவதும் தனிச்சடங்காக, ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெறுவதற்கு முந்தையதினத்தில் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தற்போது ஜாதி‚ மத வேறுபாடின்றி அனைத்து திருமணங்களிலும் இத்தகைய சடங்கு திருமணத்தைப் போன்ற உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.














நாணத்தால் முகம் சிவந்து நிற்கும் மணப்பெண்களைப்போல்‚ கைகளைசிவக்கச் செய்யும் மருதாணிபற்றி இனிப் பார்ப்போம். மருதாணி‚ தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமின்றி புறங்கையிலும்‚ கைகளின் மூட்டுவரைஅழகிய கலையம்சமிக்க‚ மிகநுணுக்கமான ஓவியங்கள் போல் மருதாணி இடப்பட்டுவருகிறது.

அரபிக் அலங்காரவடிவம்‚ இந்திய அலங்காரவடிவம் எனப் பல்வேறு வகைகளில் மருதாணி அலங்கார வடிவங்கள் காணப்பட்டாலும்‚ இந்திய அலங்கார வடிவம்தான் தற்போது இளம் பெண்கள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது. இந்திய அலங்காரங்கள் மிகநுணுக்கமானவை‚ கலைத்துவம் மிக்கவை. இதற்கு அதிகநேரம் செலவிடப்படும்.
அரபிக் அலங்காரவடிவங்கள் மிக இடைவெளி கொண்டவை. 


பெரியவடிவங்களைக் கொண்டவை. மிக இலகுவாகபோடக் கூடியவை. மணப்பெண்களுக்கு இந்திய அலங்கார வடிவங்கள்தான் மிகப் பொருத்தம். சாதாரண விழாக்களுக்கு அரபிக் அலங்கார வடிவங்களை போட்டுக் கொள்ளலாம். மெஹந்தி' என்பது முற்றுமுழுதாக மணப்பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. எவருமே சந்தோஷத்திற்காகவும், வேடிக்கைக்காகவும் போட்டுக் கொள்ளலாம்.
இது மதம்‚ இனம்‚கலாசாரம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். 


பொதுவாக அழகிய மெஹந்தி அலங்கார வடிவம் செய்வதற்கு ஒருநாள் முழுவதையும் சிலர் எடுத்துக் கொள்வதுண்டு. நல்ல கலைத்திறன்‚ கற்பனைத்திறன் உள்ளவர்கள் மூலம் மருதாணிவைத்துக் கொண்டால்‚அது காண்போரை கவரும் விதத்தில் அமையும். அத்துடன் இதற்கு சகிப்புத்தன்மை மிகமிக அவசியம் என்கின்றார் 'மெஹந்தி' அழகுக்கலை நிபுணர். என்ன இருந்தாலும் முதலில் தரமான மெஹந்தி பவுடரை தெரிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment