Tuesday, 29 March 2016

திருமணத்துக்கான நகைகள் எப்படி இருக்கலாம்?

என்னதான் இன்றைய திருமணங்களில் நாகரிக மோகம் தலைநீட்டினாலும் இன்னமும் முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய உடை மற்றும்  நகைகளைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.  திருமணத்துக்கு முன்பே மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் பொருத்தமாக இருக்கிறதா என இன்றைய  மணப்பெண்கள் ட்ரையல் பார்க்கிறார்கள். அதே போல நகைகளையும் பார்க்கலாம். அதற்கு முன் திருமணச் சடங்குகள் அனைத்துக்கும்  பொருந்தக்கூடிய மேட்ச்சிங் நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். திருமணத்துக்கான நகைகள் வாங்கும் போது கூடியவரையில் ஏற்கனவே தயாராக  உள்ள மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்காமல், நகை வடிவமைப்பாளர்களிடம் திருமண உடைகளைக் காட்டி, அதே டிசைன் மற்றும் கலரில் செய்து  வாங்கலாம்.

ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஹெவியான, பெரிய பெரிய நகைகளைத் தவிர்க்க வேண்டும். எடை குறைவானதும், கல் வைத்ததுமான  நகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அகலமான தோள்பட்டை உள்ள பெண்களுக்கு பெரிய பதக்கம் வைத்த கழுத்தணி அழகாக இருக்கும்.  மணப்பெண்கள்  நகைகளைத் தேர்வு செய்யும் போது, நெற்றிச்சுட்டி முதல் கொலுசு வரை எல்லாம் ஒரே டிசைனில், கலரில் இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.  நகைதானே, ரெடிமேடாக வாங்கும் பொருள்தானே என கடைசி நிமிட அவசரம் வேண்டாம். கடைசி நிமிடத் தேர்வில் சரியான கலரோ, டிசைனோ  அமையாது.
கூடிய வரையில் திருமணத்துக்கான புடவைகளையும் நகைகளையும் பகல் நேர வெளிச்சத்தில் தேர்ந்தெடுப்பதே சரியானது. டபுள் ஷேடு புடவைகள்  பகல் வெளிச்சத்தில் ஒரு மாதிரியாகவும் இரவு வெளிச்சத்தில் வேறு மாதிரியும் தெரியும். எனவே, புடவையையும் நகையையும் பகல் நேரத்தில்  பார்த்து வாங்கினால் சரியாக அமையும். முகூர்த்தத்துக்கு பெரும்பாலும் மெரூன், பச்சை அல்லது மாம்பழ கலர் புடவை அணிவார்கள். அதற்கு முழுக்க  முழுக்க கோல்டன் ஃபினிஷ் நகைகள் அட்டகாசமாகப் பொருந்தும். வெறும் தங்க நிறம் வேண்டாம் என்கிறவர்கள், மெரூன் புடவைக்கு கெம்ப் செட்  அல்லது வெள்ளைக் கல் வைத்த செட், மாம்பழ கலர் சேலைக்கு பச்சைக் கலர், கூடவே மாங்காய் டிசைன் போட்ட ஆரம் அணியலாம். பச்சைக் கலர்  சேலைக்கும் கெம்ப் செட் பொருந்தும்.
திருமணம் என்பது சென்டிமென்ட்டுகள் நிறைந்த ஒரு சடங்கு என்பதால், மணப்பெண்களுக்கு அம்மாவின் நகை, பாட்டியின் நகை என பழங்காலத்து  நகைகளில் சிலதையும் அணியச் சொல்வார்கள். அப்படி பழைய நகைகளை அணிகிற போது, அத்துடன் சேர்த்துப் புதிய நகைகளையும் சேர்த்து  அணிந்தால் இரண்டும் வேறு வேறு கலர்களில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பழமைக்கும் புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களுக்கு இரண்டும் கலந்த ஃபியூஷன் நகைகள் இன்று நிறைய  வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு முன்பெல்லாம் காசு மாலை மட்டும் அணிவார்கள். இன்று காசு வைத்த தோடு, வளையல் என மொத்த மணப்பெண்  செட்டுமே காசு மாடலில் கிடைக்கிறது.
மடிசார் அணிகிற பெண்கள் கால்களுக்கான நகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். மெட்டியும் கொலுசும் அவர்களது கால்களின் அளவு மற்றும்  வடிவத்துக்குப் பொருந்துகிற மாதிரி இருக்க வேண்டும். எனாமல் வைத்த மெட்டியும் கொலுசும் மாடர்ன் பெண்களின் விருப்பமாக இருக்கிறது.  தண்டையுடன் சேர்த்து கொலுசு அணிகிற பெண்களும் இருக்கிறார்கள். சில இனத்தார் வழக்கப்படி முகூர்த்தத்துக்கு நூல் புடவை அணிவது வழக்கம்.  அந்த நூல் புடவைக்கு கல் வைத்த செட் அல்லது கெம்ப் செட்தான் பொருத்தம்.  பாரம்பரியம், சென்டிமென்ட் என எதை எதையோ காரணம் காட்டி  முகூர்த்த நகைகளில் வரையறை வைத்தவர்களுக்கு வித்தியாசம் காட்ட ஒரே வாய்ப்பு வரவேற்பு.
ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு ஆரம் அணியக்கூடாது. ஏற்கனவே சேலையில் உள்ள அதிகமான வேலைப்பாடு, நகையின் அழகைக்  கெடுத்துவிடும். எனவே, சோக்கர் செட் அல்லது கல் வைத்த சிம்பிளான கழுத்தணியுடன் நிறுத்திக் கொள்ளலாம். சில்வர் கலரில் ஒர்க் செய்த  புடவைகளுக்கு பிளாட்டினம் அல்லது ஒயிட் கோல்டில் நகைகளைத் தேர்வு செய்யலாம்.
மணப்பெண்கள் தவிர்க்கக் கூடாத ஒன்று வளையல். கல் வைத்த குஜராத்தி வளையல்களுக்குத்தான் இன்று மவுசு அதிகம். எல்லா கலர்களிலும்  கிடைப்பதால் எப்படிப்பட்ட காம்பினேஷனிலும் அணிய முடியும். சேலையின் உடல் கலர் பிரதானமாக இருக்கும்படியும் பார்டர் கலர் கம்மியாக  இருக்கும்படியும் மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து அணியலாம்.
காதணி வரிசையில் முகூர்த்தத்துக்கு பெரிய பெரிய ஜிமிக்கிதான் இன்று ஃபேஷன். போல்கி ஸ்டோன் வைத்த ஜிமிக்கி அழகு. மெகா சைஸ்  கோல்டன் ஜிமிக்கிகள் எந்த கலர் பட்டுச் சேலைக்கும் அட்டகாசமாகப் பொருந்தும். அதுவே ரிசப்ஷனுக்கு அகலமான மயில் டிசைன் வைத்தது, பூ  டிசைன், பெரிய வளையத்தில் முத்து கோர்த்தது போன்றவை அழகு. சில சமூகத்தினரின் திருமணங்களில் விளையாடல் என்றொரு சடங்கு நடக்கும்.
அதில் நீளமான ஒரு சங்கிலி, அதற்கு மேட்ச்சாக ஒரு சிம்பிள் நெக்லஸ், அதே டிசைனில் தோடு, ஜிமிக்கி எடுப்பாக இருக்கும். வட இந்தியர்களின்  கலாசாரமாக இருந்த மெஹந்தி செரிமனி, இன்று எல்லாத்திருமணங்களிலும் ஒரு ஃபேஷனாகி விட்டது. மெஹந்தி சடங்கில் மணப்பெண்ணுக்கு  ஆடம்பர நகைகள் தேவையிருக்காது. காதணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, சற்றே பெரிதாக, ஆடம்பரமாக அணிவதுதான் ஃபேஷன்

                                                                www.Kalyanaveedu.com

No comments:

Post a Comment