Wednesday, 26 November 2014

தேனிலவு (ஹனிமூன்) - பெயர் காரணம்

தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று. ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் தான். அதுவும் வேறு அனுபவங்களைத் தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது. அலுவலக வேலை உடனே போக வேண்டும், அது, இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள். திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன்.

ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் (Honeymonth) தான் இருந்துள்ளது. அது தான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள். ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள். எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.




Sunday, 16 November 2014

பந்தி

கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை “பந்தி” என்கிறார்கள். பந்தி என்பதற்கு வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது. பந்தி பரிமாறுதல் என்பது ஒரு கலை.

எதோ இலையை போட்டோம் உணவுப் பதார்த்தங்களை பரிமாறினோம் என்பதில்லை பந்தியில் பரிமாறுதல் என்பது. சாப்பிடுவோர் மனம் அறிந்து பரிமாறுதல் அவசியம். வந்த விருந்தினர்களை நாம் முறையாக வரவேற்று விருந்தளிக்க வேண்டும். அவர்களது மனம்நிறைய வயிறுநிறையச் சாப்பிட்டுச் செய்ய வேண்டும்.

இதற்கு பந்தி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி' என்பது தமிழில் "பந்தி' ஆனது. “பங்க்தி” என்றால் “சேர்ந்து உண்ணுதல்” என்பது பொருள். மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம்.

Kalyanaveedu.com

Tuesday, 4 November 2014

ஆடி மாதம் புதிதாக திருமணம் ஆன தம்பதியரை பிரித்து வைக்க வேண்டுமா?

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாதமாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத்தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் தம்பதியர் ஒன்றாக இருந்து கற்பமுண்டானால் பிரசவம் சித்திரை மாதம் வரும். கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ 'இந்த மாதம்தான் உகந்தது, இந்த மாதம் சரி கிடையாது’ என எதுவுமே இல்லை.வருடத்தின் எல்லா நாட்களிலும் கர்ப்பம் தரிக்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், 'ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது, சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும். மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். சில சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான், 'சித்திரையில் பிள்ளை வேண்டாம்' என்றனர் நம் முன்னோர்கள். ஆனால், விழிப்பு உணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அந்த மூடநம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியமே இல்லை. சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன'' என்கின்றனர் மருத்துவர்கள்.

Kalyanaveedu.com



Sunday, 2 November 2014

திருமண வேள்வி

பண்டைக் காலப் பழக்க வழக்கங்களில் பல சடங்குகளாக மாறி நிலைபெற்றுள்ளன. சடங்குகளுக்கு வேள்வி செய்தல் என்பது பண்டைக்காலத்திலிருந்தே உள்ளது. அதற்கான சான்றுகள் பல உள்ளன.அதுபோல திருமண சடங்குகளில் வேள்வி செய்வதும் மிகப் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது.

     அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்க்கப்பட்டு திருமண வேள்வி உருவாக்கப்படும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

Kalyanaveedu.com



Friday, 31 October 2014

பதினாறு பேறுகள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


1. நன்மக்கள். 
2. செல்வம்.
3. அழகு.
4.
 நோயின்மை.
5.
 இளமை.
6.
 கல்வி.
7.
 வாழ்நாள்.
8.
 நல்வினை.
9.
 பெருமை.
10.
 துணிவு.
11.
 வலிமை.
12.
 வெற்றி.
13.
 நல்லுணர்வு.
14.
 புகழ்.
15.
 நுகர்ச்சி.
16. 
நல்ல நண்பன்.



Thursday, 30 October 2014

அட்சதை


திருமணத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தின் போது மணமக்கள் மீது அட்சதை போட்டு வாழ்த்துகிறோம்.

நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

அட்சதை என்றால் குத்துப் படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுது படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும்போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).

 
சிலர் முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்றும் சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப்பதினாறு பேறுபெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்

Kalyanaveedu.com




 

Wednesday, 29 October 2014

திருமண முகூர்த்த நேரம் தவறி விட்டதா? இனி கவலையை விடுங்க


நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறந்த நாட்களைத் தேர்ந்தெடுக்க நமது முன்னோர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர். அப்படி கூறப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றி நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர்தான் முகூர்த்தம்.

     திருமணம், கிரகப்பிரவேசம், காதணிவிழா, போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரம் குறித்து அந்த நேரத்தில் தான் நடத்துவது வழக்கம். ஆனால் தவிர்க்க முடியாத சில நேரங்களில் முகூர்த்த நேரம் தவறிப்போவதும் உண்டு. உதாரணத்திற்கு காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்திருப்பார்கள். ஆனால் மணப்பெண்ணோ, மண மகனோ அந்த நேரத்தில் திருமண மேடைக்கு வரமுடியாமல் போய்விடும். முகூர்த்த நேரம் முடிந்து விடும். இதனால் பலரும் குழம்பி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். இதற்கு என்ன செய்வது

     நமது சாஸ்திரத்தில் இதற்கு வழி உள்ளது. அதே திருமண முகூர்த்த நாளில், நண்பகல் 11 மணி 59 நிமிடம், 59 விநாடி முடிந்து மிகச்சரியாக 12 மணிக்கு தாலிகட்டி கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகிறது. இதன்படி சிலர் முகூர்த்த நேரத்தை தவற விட்டு நண்பகல் 12 மணிக்கு தாலி கட்டிக்கொண்டு மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். இந்த நண்பகல் 12 மணி முகூர்த்தத்தை "அபிஜித் முகூர்த்தம் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இனிமேல் முகூர்த்த நேரத்தை தவற விடுபவர்கள் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

kalyanaveedu.com

Tuesday, 28 October 2014

ஆரத்தி



நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை.பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர். 

         தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

     ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
   
      ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.


kalyanaveedu.com